Tuesday, January 6, 2009

ASL PLS Part 1



நான் ஒரு அட்வர்டைஸிங் ஏஜென்ஸியில் ஜுனியர் லெவலில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த நேரம். எங்கள் CEOக்கு கம்ப்யூட்டர் என்றாலே அலர்ஜி. அவரது பர்சனல் மெயில்களையும் நான் தான் அப்போது Handle செய்துக் கொண்டிருந்தேன். அவர் தண்ணி அடிக்கும் கிளப், அலுமினி கிளப் மற்றும் அவரது மச்சான், மாமன் அனுப்பும் மெயில்களை எல்லாம் செக் செய்து அவருக்கு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுப்பதே அலுவலகத்தில் எனது முதல் வேலையாக இருந்தது.

ஒரு நாள் அவரிடம் வேலை கேட்டு ஒரு மெயில் வந்திருந்தது. அட்டாச்மெண்ட் ஓபன் செய்துப் பார்த்தால் ஒரு பெண், வயது 20. விஸ்காம் முடித்திருந்தாள். நான் இருந்த போஸ்டிங்குக்கே அவளும் அப்ளை செய்திருந்தாள். இதென்னடா வம்பாப் போச்சி என்று மெயிலை பாஸுக்கு மறைத்து நானே அவளுடைய யாஹூ மெயிலுக்கு ஒரு ரிப்ளை அனுப்பினேன். எங்க ஆபிஸ்லே லேடிஸை எல்லாம் சேக்குறதில்லை. அதுவும் "சந்தியா"ன்னு பேரு இருந்தா சத்தியமா சேத்துக்க மாட்டோம் என்ற ரீதியில் என்னுடைய யாஹூ ஐடியில் இருந்து அவளுக்கு மின்னஞ்சல் செய்தேன். நான் வேண்டுமானால் வேறு ஏதாவது எனக்குத் தெரிந்த கம்பெனிகளில் வேலைக்கு சொல்லிப் பார்க்கிறேன் என்று அடிஷனலாக ஒரு பிட்டு போட்டு விட்டேன்.

என் அடிஷனல் பிட் அவளை கவர்ந்திருக்கக் கூடும். Thanks for your concern என்று ரிப்ளை செய்தாள். அப்போது அவளும் ஒரு ஏஜென்ஸியில் ட்ரைய்னியாக இருந்தாள். யாஹூ சாட்டில் பிகர்களுக்காக நான் அலைந்துக் கொண்டிருந்த நேரம் அது. பிகர் பெயரில் சில நாதாரிகள் என்னுடன் சாட் செய்து ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரிஜினல் பிகரே ஒன்று மாட்டிவிட்டதில் ஏக குஷி. நாம் ஒரு முறை சாட் செய்யலாமா என்று கேட்டேன். As usual பாசிட்டிவ்வான பதில் அவளிடமிருந்து வந்தது.

ராகுகாலம், எமகண்டமெல்லாம் இல்லாத ஒரு நேரத்தில் அவளது ஐடிக்கு இன்ஸ்டண்ட் மெசேஜ் ஒன்று அனுப்பி பிஸியா? என்று கேட்டேன். இல்லை என்றாள். மெதுவாக என் அறிமுகப்படலத்தை ஆரம்பித்து ரொம்பவும் டீசண்டாக மூவ் செய்தேன். அவளுடைய ஒர்க்கிங் ஸ்டைல் குறித்து விசாரித்தேன். நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு இருந்தது.

வழக்கம்போல அவளுக்காக ரொம்ப அக்கறைப்படுபவன் போல சில டெக்னிக்குகளை எடுத்து விட்டு மெல்ல மெல்ல பர்சனல் மேட்டருக்கு வந்தேன்.
"நீ பார்க்க எப்படி இருப்பே?"

"ஷாலினி மாதிரி இருப்பேன்"

"நானும் பார்க்க அஜித் மாதிரி தான் இருப்பேன்"

"அப்படியா? ரொம்ப பொய் பேசுவியா?"

"ஆமாம். அஜித் மாதிரி இருப்பேன்னு சொன்னது பொய்"

"அதானே பார்த்தேன்?""அஜித்தை விட சூப்பரா இருப்பேன்"

"அட்றா.... அட்றா.... அட்றா.... நேருல பார்க்கலேன்னு சொல்லிட்டு இஷ்டத்துக்கு அள்ளி விடறியா?"

"நேர்ல வேணா பாப்போமே?""இப்ப வேணாம். இன்னொரு நாள் பாக்கலாம்"
இவ்வாறாக சாட்டிங் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. அந்த நேரத்தில் நான் தினமும் அலுவலகத்துக்கு வருவதே அவளுடன் சாட்டிங் செய்வதற்கு என்றாகிவிட்டது. அவள் செல்லும் பஸ்ரூட், அவளது குடும்பம் என்று மெல்ல மெல்ல விசாரித்து... எப்போதும் சாட்டிங் ஸ்டார்ட் ஆகும்போது அங்கிளும், ஆண்டியும் (அவளது பெற்றோர்) நலமா? என்று விசாரித்து ஆரம்பிப்பது எனது டெக்னிக்காக இருந்தது. அவளும் இந்த பர்சனல் அட்டாக்கில் ரொம்பவே கவிழ்ந்து போய்விட்டாள்.
தினமும் பீச்சுக்கோ, பார்க்குக்கோ வரச்சொல்லி சந்திக்க நான் அவளை வற்புறுத்த அவளும் மறுக்காமல் இன்னைக்கு வேணாம்... நாளைக்கு... நாளன்னைக்கு என்று நாள் கடத்தினாள். கொஞ்சமாக எனக்கு சந்தேகம் வர அவள் முதலில் பெண்தானா? இல்லை நம்மை யாராவது நயவஞ்சகமாக ஏமாற்றுகிறார்களா என்று சந்தேகம் வந்து விட்டது. என் கைப்பேசி எண்ணை அவளுக்கு கொடுத்து பேசச்சொன்னேன். எண்ணைக் கொடுத்து விட்டு தொலைபேசி அழைப்புக்காக நான் காத்திருந்த நொடிகள் ஒவ்வொன்றும் ஒரு யுகம்.

தொலைபேசி அழைக்கிறது. சட்டென்று எடுத்து "ஹலோ நான் கிச்சா" என்று சொல்ல எதிர்முனையில் ஒரு ஆண்குரல் "மாப்பிள்ளே NAC Campaign முடிஞ்சுதாடா?" என் அலுவலக நண்பன். "போடாங்கொய்யா" என்று சொல்லிவிட்டு அவளது அழைப்புக்காக காத்திருந்தேன். அடுத்த போன்கால் எடுத்தவுடன் என் காதில் தேன் பாய்ந்தது...

"கிச்சா இருக்காரா?"

"ஜொள்ளுங்க சந்தியா" - சிஸ்டர் என்று அழைத்துவிடக் கூடாதென்று ரொம்பவும் ட்ரெய்னிங் எடுத்து வைத்திருந்தேன். கொஞ்ச நேரம் பேசினோம். சுவாரஸ்யமாக எதுவும் பேசவில்லை என்றாலும் அவள் பெண் தான் என்று எனக்கு உறுதியானது. இப்படியாக தினமும் சாட்டிங், தொலைபேசி என்று பேசிப்பேசி மனதுக்குள் அவளை தீவிரமாக காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அவள் என்ன நினைக்கிறாள் எப்படி இருப்பாள் என்று தெரியாமலேயே.

ஒரு நாள் சாட் செய்யும்போது ஒரு புதிய குண்டைப் போட்டாள். அவள் அலுவலகத்தில் வேலை செய்யும் இளைஞன் ஒருவனை தீவிரமாக காதலிப்பதாக. வெறுத்துப் போன நான் ரெண்டு நாள் லீவு போட்டுவிட்டு பாரிலேயே பழியாகக் கிடந்தேன். மொபைலையும் ஆப் செய்து வைத்திருந்தேன். இரண்டு நாள் கழித்து அலுவலகம் சென்றவன் யாஹூ மெசென்ஜரை Uninstall செய்துவிட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். என்னுடைய மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தவன் நொந்துப் போனேன். நூற்றுக்கும் மேற்பட்ட மெயில்கள் சந்தியாவிடமிருந்து. எல்லா மெயிலிலும் "SORRY" "SORRY" தான். என்னை சும்மா சீண்டிப் பார்த்தாளாம். அவள் யாரையும் காதலிக்கும் ஐடியாவில் இல்லையாம். "யப்பா, நம்பளுக்கு சான்ஸ் இன்னமும் இருக்கு" என்று குஷியானேன்.

பசுமையே இல்லாத பாலைவனமாக இருந்த என் வாழ்க்கை அவளால் கொஞ்சம் சுவாரஸ்யமானது. இடையில் எனக்கு ஏன் அந்த குரங்குப் புத்தி வந்ததோ தெரியவில்லை. என் நண்பன் ஒருவனை அவளது அலுவலகத்துக்கு அனுப்பி அவள் எப்படி இருக்கிறாள்? என்று பார்த்துவரச் சொன்னேன். வந்த பதில் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. நிறைய கருப்பு. தெத்துப் பல். ரொம்ப ஒல்லி. மொத்தத்தில் பாட்டாளி படத்தில் வந்த பெண்வேஷம் போட்ட வடிவேலு மாதிரி இருக்கிறாள் என்றான் நண்பன். ம்ம்ம்ம்.... நமக்கு வாய்ச்சது இவ்வளவுதான் என்ன செய்வது காதலித்து(?) தொலைத்துவிட்டோமே என்று மனதை தேற்றிக் கொண்டேன்.

அன்று ஒரு நாள் இரவு 9 மணி இருக்கலாம். எனக்கு அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருந்தது. ரிலீப்புக்காக யாஹூ மெசெஞ்சரை திறந்தேன். என்ன ஆச்சரியம்? சந்தியா ஆன்லைனில் இருந்தாள். பொதுவாக அலுவலக நேரத்தில் மட்டுமே ஆன்லைனில் இருப்பவள் இரவு 9 மணிக்கு என்னத்தைச் செய்துக் கொண்டிருக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டு வழக்கம்போல "Hai Darling" என்று டைப் செய்தேன். பதிலில்லை. மவுனம்.

ஏனோ அன்று என் காதலை அவளிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. பூடகமாக அவளைக் காதலிப்பதை நாகரிகமான வார்த்தைகளில் சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பாராமல் லாக்-அவுட் செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். மொபைலில் அவள் வருவாள் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து தூக்கம் தொலைத்த இரவாக அது மாறியது. +2 ரிசல்ட்டுக்கு கூட நான் அந்த அளவு டென்ஷன் ஆனதில்லை (+2 ரிசல்ட் என்னவாகும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதும் ஒரு காரணம்)

மறுநாள் அலுவலகம் சென்று யாஹூ தூதுவனை திறந்துப் பார்த்தேன்.ஆன்லைனில் இருந்தால் "hi" சொன்னேன். பதில் இல்லை. "Sorry" சொன்னேன். அதற்கும் பதில் இல்லை. தொடர்ந்து கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தும் அவளிடமிருந்து பதில் ஏதும் இல்லை. அவள் அலுவலகத்துக்குத் தொலைபேசிப் பார்த்தேன். "இல்லை" என்று அவள் சொல்ல சொன்னதாக சொன்னார்கள். அவள் ஸ்டைலிலேயே நூற்றுக்கணக்கான "SORRY" மெயில் அனுப்பியும் எந்த Responseம் இல்லை. சுமார் ஒரு மாதக்காலம் போராடி, போராடி வெறுத்துப் போனேன்.

கிட்டத்தட்ட அவளை மறந்து விட்ட ஒரு நாள் காலை...

யாஹூவில் சென்னை சாட்ரூமில் இருந்தேன்.

"Hi"

"Hi"

"ASL Pls?"

"I am kichcha 22/M/Chennai.

Your ASL?" - (22 என்பது நமக்கு என்றுமே மாறாதது :-)

"I am Bhuvana 19/F/Chennai"

ஒரு வழி அடைத்தால் இன்னொரு வழி திறக்கும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

No comments:

Post a Comment